Published : 17 May 2022 07:29 AM
Last Updated : 17 May 2022 07:29 AM

மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீரர்களுக்கான ஏற்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாட்டுக் பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், போட்டி நடைபெற உள்ள விடுதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போர் பாயிண்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் ஜூலை 27-ம் தேதி முதல்ஆக. 10-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இதில், 150 வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள்பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

இதனால், மாமல்லபுரம் மற்றும்ஈசிஆர் சாலையோரம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளில் வீரர்கள் தங்கும்வகையில் அனைத்து விதமானஅடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், விடுதிகளில் வீரர்கள் தங்குவது, அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது,சர்வதேச அளவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக, பல்வேறு குழுவினர் மற்றும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், போட்டி நடைபெற உள்ள சொகுசு விடுதி மற்றும் மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட உள்ள மற்றொரு விளைாட்டு திடல் பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளர் மற்றும் ஒலிம்பியாட் இயக்குநர் பரத்சிங் சவுகான், செயற்குழு உறுப்பினர் சங்கர், விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, குழு கமிட்டி தலைவர் ஆனந்த்குமார், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், எஸ்பி.சுகுணா சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசியதாவது: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜூலை 10-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக முதல்வர் தலைமையில் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்தப் போட்டிக்காக 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்கூடுதலாக ஒரு களம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x