Published : 12 May 2016 09:21 AM
Last Updated : 12 May 2016 09:21 AM
சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் கடல் எல்லையைத் தாண்டியதாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனையை சேர்ந்த ஜீடு(37), கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜில்டு(27), அழிக்காலை சேர்ந்த சகாய ஆன்றோ(30), ஆரோக்கிய பிரிட்டோ(26), சின்னவிளையை சேர்ந்த எட்வின்ராஜ்(27) ஆகிய 5 மீனவர்களும் சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளாக தங்கி இருந்து மீன்பிடி வேலைக்கு சென்று வருகின்றனர்.
ஏப்ரல் 25-ம் தேதி சவுதி அரேபியாவின் சுப்தீப் துறைமுகத் தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கடல் எல்லையைத் தாண்டி தவறுதலாக ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறி கடற்படையினர் கைது செய்து அங்குள்ள ஜெருல்லா பகுதி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவல்களை 5 மீனவர்களும் குமரி மாவட்டத்தில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுவித்து சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தெற்காசிய தோழமை அமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் நேற்று மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே கடல் எல்லை பகுதியில் சண்டை நடந்து வருகிறது.
இதனால் இருநாட்டு தூதரக உறவும் துண்டிக்கப்பட்டு அவர்களை விடுவிப்பதில் சிக்கல் நீடித்துள்ளது. எனவே குமரி மீனவர்களை மீட்க இந்திய தூதரகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT