Published : 13 May 2022 07:11 AM
Last Updated : 13 May 2022 07:11 AM

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் உதகை: சிறுவர் முதல் பெரியவர் வரை குதுகலிக்க கோடை விழா

உதகை: சுற்றுலா பயணிகளை வரவேற்க முழு வீச்சில் தயாராகி வருகிறது உதகை. அவர்களை மகிழ்விக்க கோடை விழாக்களுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் 35 லட்சம் பேர் வந்த நிலையில், இந்த எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 7-ம் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் காய்கறி வளங்களை பறைசாற்றும் விதமாக பல்வேறு காட்சித் திடல்களை இக்காட்சியில் அமைத்து அனைத்து விதமான காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் சுமார் ஒன்றரை டன் காரட் மற்றும் 600 கிலோ முள்ளங்கியைக் கொண்டு குட்டியுடன் ஒட்டகச்சிவிங்கி அமைக்கப்பட்டது.

மேலும், காய்கறிகளை கொண்டு மீன், கிட்டார், கடிகாரம், உதகையின் 200-வது ஆண்டினை போற்றும் நோக்கில் ‘ஊட்டி - 200’ என்ற சிறப்பு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை, தருமபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா, கப்பல் மீன், டோரா போன்ற வடிவங்களும் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இரு நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கூடலூரில் இன்று வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது. நாளை உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி தொடங்குகிறது. இதற்காக 4000 ரகங்களில் 30 ஆயிரம் செடிகளில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இரு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் 19-ம் தேதி உதகை படகு இல்லத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பின்னர் விழாவின் முக்கிய அங்கமான மலர் கண்காட்சி 20-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. இந்தாண்டு சிறப்பம்சமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

உதகை மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியைக் கண்டு ரசித்துச் செல்வார்கள்.

சுற்றுலா பயணிகளைக் கவர 275 ரகங்களில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

மலர் காட்சியையொட்டி மலர்க் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. 24-ம் தேதி நடக்கும் மலர் கண்காட்சி பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பரிசுகளை வழங்குகிறார்.

இதையடுத்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்காட்சி நடக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கோடை விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கோடை விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் முனைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x