Published : 24 May 2016 09:34 AM
Last Updated : 24 May 2016 09:34 AM

14 நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் பண பரிவர்த்தனை: அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

14 நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப் படுவதற்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதை வாங்கி ஆதாயமடைந்தார் என்பது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்கள், அவரது நண்பர்களின் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் அமலாக் கப்பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வெளிநாடு களில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் செய்த பணப் பரிவர்த்தனைகள் குறித்தும், வணிக தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதை அடிப்படையாக வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிரிட்டிஷ் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கார்த்தி சிதம்பரம் செய்துள்ள பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அந்த நாடுகளில் இவருக்கு உள்ள வணிக தொடர்புகள் குறித்து தகவல்களை பெற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதற்காக இந்த 14 நாடுகளுக்கும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x