Published : 12 May 2022 06:54 AM
Last Updated : 12 May 2022 06:54 AM

‘உங்கள் குரல் - தெருவிழா’ கோரிக்கை உடனடியாக வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு: விரைந்து நிறைவேற்றிய நகராட்சி நிர்வாகம்

`உங்கள் குரல் - தெருவிழாவில்' முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தருமபுரி நகராட்சியின் 29-வது வார்டு நெடுமாறன் நகரில் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியாளர்கள்

தருமபுரி: தருமபுரி நகராட்சியில் நடந்த `உங்கள் குரல் - தெரு விழாவின்' போது முன்வைக்கப்பட்ட பாதாள சாக்கடை இணைப்பு நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி நகராட்சி நிர்வாகமும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து கடந்த 8-ம் தேதி ‘உங்கள் குரல் தெருவிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் இந்து தமிழ் திசை வாசகர்கள் பலரும் திரளாக பங்கேற்றனர். தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் போன்றவற்றை வாசகர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கைகளில் உடனடியாக செய்து முடிக்க சாத்தியமுள்ள கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும், அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கீடு பெற்று நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் முறைப்படி செய்து தரப்படும், இதர அரசு துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் வகையிலான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆட்சியரின் வழிகாட்டுதல்படி நிறைவேற்றித் தரப்படும் என அதிகாரிகள் பதிலளித்தனர்.

அந்த வரிசையில், வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கேட்டு கோரிக்கை வைத்த வாசகரின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சியின் 29-வது வார்டில் நெடுமாறன் நகரில் வசிக்கும் ஜெயவேல் என்பவர் இந்த கோரிக்கையை `உங்கள் குரல் தெருவிழா' நிகழ்ச்சியில் முன்வைத்தார். இந்நிலையில், தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டாண் மாது, நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் நகராட்சியின் பாதாள சாக்கடை பிரிவு அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம் வாசகர் ஜெயவேலுவின் கோரிக்கை உடனடியாக நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x