Published : 08 May 2022 05:06 AM
Last Updated : 08 May 2022 05:06 AM
சென்னை: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.50 உயர்ந்து ரூ.1,015.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.305 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் வீட்டு உபயோக சமையல்காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து, கடந்த அக்டோபரில் ரூ.915.50 ஆக உயர்ந்தது.
பின்னர், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல் முடிவடைந்தது, மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், கடந்த மார்ச்சில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்த்தின. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.1,015.50 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 17 மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.305 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.2,508.50-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘கரோனா தொற்று பரவலுக்கு பிறகு வருமானம் பாதியாக குறைந்துவிட்டது. பலர் வேலையின்றி தவிக்கின்றனர். சிலருக்கு வேலை இருந்தாலும் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாதாந்திர வீட்டுச் செலவை சமாளிப்பது பெரும் சுமையாக உள்ளது. இந்த நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. மாத சம்பளத்தில் சிலிண்டருக்காகவே ஆயிரம் ரூபாய் வரை ஒதுக்க வேண்டி உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT