Published : 06 May 2022 07:18 AM
Last Updated : 06 May 2022 07:18 AM

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சொந்த ஊர் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர். 29.3.22-ல் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர், 31.3.22-ல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர், 3.4.22-ல் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 19 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஏப்ரல் 18-ல் நீதிபதி கஜநிதிபாலன், 19 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் 19 மீனவர்களும் கொழும்புவிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். பின்னர் மீனவளத் துறை ஏற்பாட்டின் பேரில் வாகனங்களில் மீனவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x