Published : 05 May 2022 05:59 AM
Last Updated : 05 May 2022 05:59 AM

கணக்கெடுத்து 8 மாதங்கள் ஆகியும் வீடு ஒதுக்காததால் சாலையோரம் வசித்த 42 குடும்பங்கள் ரிப்பன் மாளிகை முற்றுகை போராட்டம்

சென்னை: சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் கணக்கெடுப்பு நடத்தி 8 மாதங்கள் ஆகியும் வீடுகள் வழங்காததால் பயனாளிகள் குடும்பத்துடன் ரிப்பன் மாளிகையை நேற்று முற்றுகையிட்டனர்.

சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சாலையோரம் வசிப்போருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரம் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புளியந்தோப்பு கே.பி.பூங்காவில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று, சென்னை ரிப்பன் மாளிகை அருகில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 42 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீடுகள் வழங்கக் கோரி பயனாளி குடும்பங்கள் ரிப்பன் மாளிகையை நேற்று முற்றுகையிட்டன.

அவர்களின் சார்பில் சிலரை அழைத்துச் சென்று, மேயர் ஆர்.பிரியாவை சந்திக்க வைத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக பின்னர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக வீடு கிடைக்காத குடும்பத்தினர் கூறும்போது, “வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வைத்திருக்கிறோம். இந்தச் சூழலில் எங்களால் சாலையில் வசிக்க முடியவில்லை. அதனால் எங்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும். எழும்பூரில் வசித்தவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தியபின், அடுத்த 3 மாதங்களில் வீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் 8 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு வீடு வழங்கவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x