Published : 02 May 2022 06:07 AM
Last Updated : 02 May 2022 06:07 AM

‘நகரின் அடையாளங்களில் ஒன்று’ - பொள்ளாச்சியில் அகற்றப்பட்ட காந்தி சிலையை அதே இடத்தில் நிறுவ எம்.பி. வலியுறுத்தல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் கோவை, உடுமலை, வால்பாறை, பல்லடம், பாலக்காடு சாலை என ஐந்து முக்கிய வழித்தடங்கள் சந்திப்பின் நடுவே பீடம் அமைத்து, 1985-ம் ஆண்டு காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில், பொதுமக்கள் மற்றும் தேச பக்தர்கள், அரசியல் அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவந்தனர். நகரின் அடையாளங்களுள் ஒன்றாக காந்தி சிலை பகுதி விளங்கியது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணிக்காக, காந்தி சிலை அகற்றப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்க பணி நிறைவடைந்து வாகனப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. ஆனால் காந்தி சிலை அதற்கான இடத்தில் மீண்டும் நிறுவப்படாமல் உள்ளது. காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை எழுப்பியிருந்தன.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை நேற்று முன்தினம் சந்தித்த பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். அதே இடத்தில் நிறுவ ஆணை பிறப்பிப்பதாக அவரிடம் ஆட்சியர் உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x