Last Updated : 14 May, 2016 11:56 AM

 

Published : 14 May 2016 11:56 AM
Last Updated : 14 May 2016 11:56 AM

403 பகுதி நேர ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பதிவாகவில்லை: பூர்த்தி செய்த படிவங்கள் மாயமானதாகப் புகார்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 403 பகுதி நேர ஆசிரியர்களின் தபால் வாக்குப் பதிவு படிவங்கள் மாயமாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசு ஊழியர்களைப் போல தொடர் விடுமுறை, போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை. இப் பணி, நிரந்தரமானது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு நிரந்தர அரசு ஊழியர்களைப் போல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிநிரந்தரம், பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாரபட்சம் காட்டப்படும்போது, தேர்தல் பணியில் மட்டும் அரசு ஊழியர்களைப் போலவே தேர்தல் பணி ஒதுக்கியது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தபால் வாக்குப்பதிவு வசதி, கோவை மாவட்டத்திலுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை எனவும், அதற்காக பூர்த்தி செய்து கொடுத்த படிவங்கள் மாயமாகிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. தேர்தல் பணி ஆணை பெற்றுள்ள அனைத்துத் துறை ஊழியர்களின் தபால்வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் தபால்வாக்குகள் மட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இதனால் வாக்குகளை எப்படி பதிவு செய்வது என்ற குழப்பமும் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் கூறும்போது, ‘தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தங்களது தொகுதியில் சென்று வாக்களிக்க முடியாது என்பதற்காக அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படுகின்றன. எங்களுக்கும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. அதில் 403 பேரின் தபால் வாக்குகள் முறையாக பதிவு செய்யப்படாமல் தவற விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் இனி எப்படி தபால் வாக்குகளைப் பதிவு செய்வது எனத் தெரியவில்லை’ என்றனர்.

நடவடிக்கை இல்லை

கலையாசிரியர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ‘தபால் வாக்குப் பதிவுக்கு படிவம் 12 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டது. அவர்களும் பூர்த்தி செய்து கொடுத்தனர். அவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான வாக்குப்பதிவுச் சீட்டுகள் 403 பேருக்கு வந்து சேரவில்லை. மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் (மே 12) தபால் வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்பளிப்பதாக கூறினர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 15-ம் தேதி முதல் அனைவருமே வாக்குச்சா வடிகளுக்கு அனுப்பப்படுவர். அதன் பிறகு 17-ம் தேதிக்கு மேல் தபால் வாக்குகளை எப்படி பதிவு செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் பூர்த்தி செய்து சமர்பித்த தபால் வாக்குப்பதிவு படிவங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாக தெரியவந்துள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x