Published : 27 Apr 2022 06:21 AM
Last Updated : 27 Apr 2022 06:21 AM

சென்னை அயோத்தியா மண்டபம் வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு

சென்னை: அயோத்தியா மண்டபத்தை அரசு கையில் எடுத்ததை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ்என்ற அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ள நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்போவதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலையில் உள்ள ஸ்ரீ ராம் சமாஜ் என்ற தனியார் அமைப்பு கடந்த 1958-ம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை ஏற்படுத்தியது. இங்கு கலை, கலாச்சாரம், சமயம் தொடர்பான பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அயோத்தியா மண்டபம் ஒரு கோயில் என்று கூறியும், அங்கு உண்டியல் வைத்து பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த தனியார் அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறி அயோத்தியா மண்டபத்தை இந்துசமய அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தக்காரை நியமித்தது.

இதை எதிர்த்து  ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘‘இந்த பிரச்சினைக்கு இந்த வழக்கின் மூலமாக தீர்வு காண முடியாது. சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிட்டு தீர்வு காணலாம்’’ என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை கடந்த ஏப்.11-ம் தேதி தனது கையில் எடுத்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் தலைவரான எஸ்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அயோத்தியா மண்டபம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, ‘‘அயோத்யா மண்டத்தை என்ன காரணத்துக்காக தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது என்பது குறித்தோ, நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்தோ எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் தனி நீதிபதி தங்களது மனுவை தள்ளுபடி செய்துள்ளார்’’ என குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு உண்டியல் வைத்து பணம் வசூலித்ததாலும், மதரீதியிலான காரியங்களில் ஈடுபட்டதாலும் இந்தநடவடிக்கை சட்டரீதியாகவே எடுக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி முன்பு இருந்த வழக்கில் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி வசூலித்த இந்த அமைப்பு வருவாய் விவரங்களை முறையாக அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. இதற்குமாற்றுத் தீர்வாக, அறநிலையத் துறை அதிகாரிகளிடம் எப்போது வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்யலாம்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த பிரச்சினைக்கு கடந்த 2014-ம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துவிட்டு, 8 ஆண்டுகள் கழித்து மாற்று தீர்வு உள்ளது என்று கூறி இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ய முடியாது. அதேபோல சரியான காரணங்கள் இல்லாமல் தனியார் அமைப்பான ஸ்ரீ ராம் சமாஜின் அன்றாட நடவடிக்கைகளில் அரசும் தலையீடு செய்ய முடியாது. எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதி மற்றும் அறநிலையத் துறையின் உத்தரவை ரத்து செய்யப்போகிறேன்’’ என்று கூறி, வழக்கின் தீர்ப்பை இன்று தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x