Published : 26 Apr 2022 07:58 PM
Last Updated : 26 Apr 2022 07:58 PM

 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள், இ-வாகன சார்ஜிங் மையங்கள்: தமிழக அரசின் 19 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த எரிசக்தி துறை மீதான விவாதத்தின்போது, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை சாலையோரம் இருக்கும் துணை மின் நிலையங்களில் நிறுவுதல், தமிழகம் முழுவதும் 2000 மெகாவாட் " சூரிய மின் சக்தி பூங்கா" (Solar Power Park) நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல், ரூ.1,649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் எரிசக்தி துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அவர் வெளியிட்ட 19 முக்கிய அறிவிப்புகள்:

> 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள்

> சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு

> விவசாயிகளஉக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் பரந்த அடித்தளத்தைக் கொண்ட மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக மிகக் குறுகிய அடித்தளம் கொண்ட மிக உயர் மின்னழுத்த ஒற்றை மின் கம்பங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.

> தமிழகம் முழுவதும் 2000 மெகாவாட் " சூரிய மின் சக்தி பூங்கா" (Solar Power Park) நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

> தமிழகத்தில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் 10,809 உயரழுத்த மின்பாதைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாய மின் இணைப்புகள் கொண்ட 1,686 ஊரக மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டு அதனை விவசாய மின் இணைப்புகள் கொண்ட பாதை மற்றும் விவசாய மின் இணைப்புகள் இல்லாத பாதைகளாக பிரித்து விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட மின்பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரியசக்தியுடன் இணைந்த (HYBRID) மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

> தமிழ்நாட்டில் உயர் மின் அழுத்த கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் 273 மின்பாதைகள் (Feeders) தேர்வு செய்யப்பட்டு அப்பாதைகளில் உயர் மின்னழுத்த விநியோக அமைப்பின் மூலம் குறைந்த அளவு திறன் கொண்ட மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்படும்.

> தமிழகமெங்கும் 4,500 இடங்களில், ஒரே இடத்தில் இருக்கும் இரு மின் விநியோக மின்மாற்றிகளை உயர் மின்னழுத்த மின் விநியோக அமைப்பின் மூலம் பிரித்தல்.

> பழைய மற்றும் திறன் குறைந்த 54208 கி.மீ 33 கி.வோ மின் பாதைகளை புதிதாக மாற்றுதல்

> திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சுசீந்திரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் நான்கு மாட வீதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல்

> ரூ.1,649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

> ரூ.166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறனை மேம்படுத்துதல்

> மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை சாலையோரம் இருக்கும் துணை மின் நிலையங்களில் நிறுவுதல்

> எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்தில் புகைபோக்கி வளிமக் கந்தக நீக்கும் அமைப்பை (Flue Gas Desulpurisation- FGD) நிறுவுதல்.

> மின் தடங்கல் எதுவும் இல்லாமல் உயர் மின் அழுத்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு புதிய Hot Line கோட்டம் உருவாக்குதல்

> ஒருங்கிணைந்த மின் கட்டமைப்பு மேலாண்மைத் திட்டம் (Unified Network Management System)

> நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்ய Thermo Gravimetric Analyser நிறுவுதல்

> பேசின் பாலம் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையத்தில் 2x30 மெகாவாட் அலகுகளை நாப்தாவிலிருந்து திரவ நிலை எரிவாயு (R LNG)க்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

> திருமாக்கோட்டை எரிவாயு சுழலி மின் நிலையத்திற்கு மதனம் எரிவாயு வயலில் இருந்து எரிவாயு ஒதுக்கீடு பெறுதல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x