Published : 20 Jun 2014 10:00 AM
Last Updated : 20 Jun 2014 10:00 AM

கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த இளைஞர்களின் புதியதொரு முயற்சி: வீதிகளில் விளையாடியபடியே துண்டுப் பிரசுரம் வழங்கினர்

பிரேசில் நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தவும், அந்தப் போட்டியை டி.வி.யில் பார்க்க வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து வீரர்கள், சிறுவர்கள் வீதிவீதியாக கால்பந்து விளையாடியபடி சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கியது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் உற்சாகம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பிரேசிலில் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளை உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக டி.வி.யிலும், நேரிலும் பார்த்து வருகின்றனர். இப்போட்டியில் கலந்துகொள்ள இந்தியா தகுதி பெறவில்லை. கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாததால் இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரேசில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு மவுசு ஏற்படவில்லை. டி.வி.யில் வேடிக்கை பார்க்கக்கூட மக்களுக்கு ஆர்வமில்லை.

இந்நிலையில் கால்பந்துப் போட்டியைப் பிரபலப்படுத்தவும், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை டி.வி.யில் பார்க்க வைக்கவும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கால்பந்து வீரர்கள், சிறுவர்கள் சீருடை பனியன் அணிந்தபடி வீதிவீதியாகச் செல்கிறார்கள். தலை மற்றும் கால்களால் கால்பந்தை லாவகமாக கடத்தியபடி சென்று, உலகக் கோப்பை போட்டியைப் பாருங்கள் என துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

சிறுவர்களுடைய இந்த நூதன பிரசாரம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் ஊர் ஊராக வீதிகளில் கால்பந்து விளையாடியபடியே செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டு வருகின்றனர். அவர்களிடம், உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை பார்த்து ரசியுங்கள், ஆதரவு கொடுங்கள் என்று தூண்டுகிறார்கள். உலகக் கோப்பை கால்பந்து போட்டி விளையாட்டு அட்டவணை மற்றும் ஒளிபரப்பப்படும் டி.வி. நேரங்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கால்பந்துக்கு அதிக ரசிகர்கள்

இதுகுறித்து வத்தலகுண்டு ராயல் கால்பந்து கழகச் செயலர் முத்துப்பாண்டி கூறியது: கால்பந்து விளையாட்டுக்குத்தான் உலகில் அதிக ரசிகர்கள் உள்ளனர். உலகில் அதிக நாடுகள் விளையாடும் விளையாட்டு கால்பந்துதான். அதனால், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை பொதுமக்கள் பார்க்கும்போது, உலக நாடுகளில் கால்பந்துக்குள்ள வரவேற்பைப் பார்த்து, அவர்கள் தங்கள் குழந்தைகளை, கால்பந்து விளையாட ஊக்கப்படுத்துவர்.

இப்போது குழந்தைகளை கால்பந்து விளையாட ஊக்குவித்தால் மட்டுமே அடுத்த 10 ஆண்டுகளிலாவது இந்தியா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும் அளவுக்கு தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். கால்பந்து உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியையும் வலுவையும் சேர்க்கும். அதனால், கிரிக்கெட் வீரர்கள்கூட உடற்பயிற்சிக்காக கால்பந்தை விளையாடுகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x