Published : 22 Apr 2022 06:24 AM
Last Updated : 22 Apr 2022 06:24 AM

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்; அலங்காநல்லூர் மக்கள் வரவேற்பு: போட்டி பல நாட்கள் நடக்க வாய்ப்பு

மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படு கிறது. உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுவது அலங்காநல்லூரில் நடப்பதைத்தான். தைப்பொங்கலின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அடுத்தடுத்த நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும். கார்கள் முதல் தங்கக்காசுகள் வரையில் ஏராளமான பரிசுகள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் என ஏராளமான சிறப்புகளுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுக்கென பார்வையாளர் மாடம், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டினர் பார்வையிட தனித்தனி மாடங்கள் என ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்படும். தடுப்புகள், மேடை அமைப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவிடப்படும். இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் வாடிவாசல் அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகிய இடமாக இருக்கும். அதிகப் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை காண முடியாது. பாதுகாப்பு வழங்குவது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ஆண்டுக்காண்டு காளைகள், பார்வை யாளர்கள், மாடுபிடி வீரர்கள், பரிசுகள் என அனைத்தின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வதால் சமாளிக்க முடியாமல் ஏற்பாட்டாளர்கள் திணறிவிடுகின்றனர். ஜல்லிக்கட்டின் பெருமையை மேலும் உலகறியச் செய்யவும் விசாலமான மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

இதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நேற்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு அலங்கா நல்லூர் சுற்றுப்பகுதி மக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், இப்பகுதி மக்களின் உணர்வுப் பூர்வமான நீண்ட நாள் கோரிக்கையை முதல் வர் நிறைவேற்றியுள்ளார். அனைத்து வசதி களுடன் பிரம்மாண்ட முறையில் மைதானம் அமைக்கப்படும். அது ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், வீரர்கள் என அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும், என்றார்.

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ‘முதல்வரின் அறிவிப்பு வரவேற்கக்கூடியது. மைதானம் அமைந்ததும் பொங்கல் பண்டிகையின்போது மட்டுமின்றி கிரிக்கெட் போட்டிகளைப்போல் அடிக்கடி அல்லது மாதந் தோறும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காளை வளர்ப்போர், வீரர்களுக்கு வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஜல்லிக் கட்டின் மறுபெயர் அலங்காநல்லூர் என்ற பெயர் நிலைக்கும். இது மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களுக்கே பெருமை சேர்க்கும் என்றனர்.

அலங்காநல்லூரிலிருந்து பாலமேடு செல்லும் சாலையில் 15 ஏக்கர் அரசு நிலம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு நிரந்தர மைதானம் அமைய வாய்ப்பு அதிகம் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x