Published : 17 Apr 2022 04:05 AM
Last Updated : 17 Apr 2022 04:05 AM

சித்திரை முழு நிலவை முன்னிட்டு தொல்காப்பியர், கண்ணகி சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னை

சித்திரை முழு நிலவை முன்னிட்டு, தொல்காப்பியர், கண்ணகி சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மேயர் பிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் படைத்தவர் தொல்காப்பியர். அவரின் பெருமையையும், தொல்காப்பியத்தின் வளமைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கிலும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு நாளில் தொல்காப்பியருக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, கற்புக்கரசி கண்ணகியின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளில் தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கு நேற்று மாலை அணிவிக்கப்பட்டது. அந்த சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தொல்காப்பியரின் படத்துக்கு சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல, மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலைக்கும் மாலை அணிவித்தும், அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ த.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x