Published : 15 Apr 2022 05:47 AM
Last Updated : 15 Apr 2022 05:47 AM

அண்ணா பல்கலை.யை பிரிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: சுதந்திரத்தைவிட சமத்துவம் முக்கியம் என்பதால்தான் அரசமைப்பு சட்டத்திலே அதற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அம்பேத்கர் வழியில் சமூகநீதி, சமத்துவத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும். படிக்கும்போதே மாணவர்கள் சமுதாய உணர்வைப் பெறுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால், மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சிகளை உருவாக்குவதில் தவறில்லை. ஆனால், உணவு, உடை, மொழி, படிப்பு என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியாது. மறைந்த தலைவர்களின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவுமில்லை. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை தடுக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

ரகசியப் பட்டியலில் கல்வி

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல், மாநிலப் பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசியப் பட்டியலில் உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை. கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x