Published : 13 Apr 2022 01:01 PM
Last Updated : 13 Apr 2022 01:01 PM

திருவள்ளுவர் பல்கலை. முறைகேடு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊரிஸ் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழகத் தேர்வு உள்ளிட்ட ரகசிய பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பணிகளுக்கு டெண்டர் கோரியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் தேர்வில் முறைகேடுகள் நடக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடக்கிறது.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக வேந்தர், உயர்கல்வித் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது புகார் மனுக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் அனுப்பி வைத்து, விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளதாக உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளித்துள்ளார். எனவே அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், தனது புகார் மனுவை பரிசீலிக்கவும், முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x