Published : 16 Apr 2016 11:00 AM
Last Updated : 16 Apr 2016 11:00 AM

உதகை பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள்: கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏமாற்றம்

உதகை ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும் அதேவேளையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு ரோஜா கண்காட்சி நடைபெறாது என தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்படும். அதில் ரோஜா மற்றும் மலர்க் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி உள்ளிட்டவை இடம்பெறும்.

இந்த ஆண்டு, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 21, 22 தேதிகளில் பழக் கண்காட்சியும், மே 27, 28, 29 தேதிகளில் மலர்க் கண்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்து

உதகை ரோஜா பூங்காவில் சுமார் 4000 ரகங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. பல வண்ணங்களில் பூத்துள்ள ரோஜா மலர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ரோஜா கண்காட்சி, காற்கறி மற்றும் வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வலியுறுத்தல்

தேர்தலை காரணம் காட்டி ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சுற்றுலா பயணிகள் பார்வைக்கு சிறப்பு அலங்காரங்களை, தோட்டக்கலைத் துறையினர் காட்சிப்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காட்சி ரத்து ஏன்?

கடந்த 2000-ம் ஆண்டு தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டபோது, மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், தேர்தல் கால கட்டங்களில், இதுவரை கண்காட்சி ரத்து செய்யப்படவில்லை.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் மே மாதங்களிலேயே நடத்தப்பட்டன. அப்போதெல்லாம் கண்காட்சி ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x