Published : 12 Apr 2022 11:42 AM
Last Updated : 12 Apr 2022 11:42 AM

திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக உருவாக கூடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல்நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், பின்னர் ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தார்கள், இப்போது ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படியாக பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம். இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பேருருவெடுக்கும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்!" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x