Published : 12 Apr 2022 05:45 AM
Last Updated : 12 Apr 2022 05:45 AM

அறநிலையத் துறை அதிகாரிகள் கையகப்படுத்த வந்ததை கண்டித்து அயோத்தியா மண்டபத்தை பூட்டி பாஜக போராட்டம்

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை கையகப்படுத்துவதை கண்டித்து வாயில்களை பூட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கையகப்படுத்த வந்ததைக் கண்டித்து மடத்தின் வாயிலை பூட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ராம்சமாஜ் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வருகிறது. இங்கு, ராம் லஷ்மண, சீதை அனுமார் பஞ்சலோக விக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கு கருங்கல் சிலை வைத்து வழிபாடு நடக்கிறது.

இச்சூழலில், ராம் சமாஜ், நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2014-ல் அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. இதை எதிர்த்து, ராம் சமாஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று காலை அயோத்தியா மண்டபத்தை ஆய்வு செய்து கையகப்படுத்த வந்தனர். இதற்கு எதிர்ப்புதெரிவித்து பாஜகவினர் குவிந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

அப்போது, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அயோத்தியா மண்டப பஜனை மடத்தின் வாயில் கதவை பூட்டி வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அயோத்தியா மண்டபத்தை பார்வையிட வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை, உள்ளேஅனுமதிக்கவில்லை. இதை தொடர்ந்து, அவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

முன்னதாக, கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பஜனை மடத்தைஅறநிலையத் துறை கைப்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பஜனை மடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்த மடத்துக்கு நியமனம் செய்யப்பட்ட செயல் அலுவலரின் நியமனம் செல்லாது. இங்கிருப்பது கோயில் அல்ல. அறக்கட்டளையின் பஜனைமண்டபம். 2014-ம் ஆண்டு இந்துசமய அறநிலைத் துறை மடத்தை கைப்பற்றியவுடன் நாங்கள் தடை வாங்கி விட்டோம். தற்போது மீண்டும் அவசரகதியில் கைப்பற்றும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்துக்கு புறம்பானது' என்றார்.

இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நீதிமன்றம் அயோத்தியாமண்டபத்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்டவழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. அதன்பிறகு, உரிய காலக்கெடு கொடுத்தும் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தையோ, அறநிலையத் துறையோ நாடவில்லை. அதனால், அனைத்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி தான் நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x