Published : 08 Apr 2022 06:13 AM
Last Updated : 08 Apr 2022 06:13 AM

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய வருவாய் ஆதாரம் சொத்து வரி: ஓட்டுக்காக வரி உயர்வில் தயக்கம் காட்டிய திமுக, அதிமுக

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி உள்ளது. 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஓட்டுக்காக சொத்து வரியை உயர்த்துவதில் தயக்கம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமே சொத்து வரிதான். பல நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஊழியர்களுக்கான மாத ஊதியம் சொத்து வரி வசூலித்தே வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு பணியாளர்ஊதியம், ஓய்வூதிய செலவு மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல்செலவிடப்படுகிறது.

கரோனா பரவல் காலத்தில், அடுத்த மாதம் பணியாளர்களுக்கு ஊதியம் தரக்கூட நிதி இல்லை. அதனால் இம்மாத ஊதியம் வழங்க, சொத்து வரியை வசூலிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் வருவாய்த் துறை அதிகாரிகளை துரிதப்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புறஉள்ளாட்சிகள் மற்றும் சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை. அதேபோல, சென்னை மாநகராட்சியில் 176 சதுர கி.மீ. பரப்பு கொண்டபிரதான மாநகரில் 1998-க்கு பிறகு வரி உயர்த்தப்படவே இல்லை.

கடந்த 2013, 2019-ல் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது சொத்து உரிமையாளர்களை 4 பிரிவாக பிரித்து 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதாவது, 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுர அடிக்குமேல் என 4 வகையாக பிரித்துசொத்துவரி மதிப்பிடப்படுவதாகவும், சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும்இதர 20 மாநகராட்சிகளில் 88 சதவீத சொத்துகள் 1,200 சதுர அடிக்கும் குறைவாக இருப்பதால் இந்த வரி உயர்வு மக்களுக்கு பெரிய பாதிப்பை தராது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

வாடகை உயருமோ?

ஆனால், வரி உயர்வுக்கு சொத்து உரிமையாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். உரிமையாளர்கள், வரி உயர்வை காரணம் காட்டி வாடகையை எவ்வளவு உயர்த்துவார்களோ என்ற அச்சம்குடியிருப்போர், வாடகை கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது,

இதுகுறித்து சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த சொத்து உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா பரவல் தாக்கத்தால் பல குடும்பங்கள் வீடுகளைவிட்டுவெளியேறிய நிலையில், பல வீடுகள் வாடகைதாரர் இன்றி காலியாக கிடக்கின்றன. கடைகளுக்கும் இதே நிலைதான். ஆனால் இந்த சொத்து வரி உயர்வால், வருவாய் தராத குடியிருப்புகள், கடைகளுக்கும் சொத்துவரி செலுத்த வேண்டியுள்ளது. வரியை உயர்த்தினால் நாங்கள் வாடகைதாரர்களிடம் தான் வசூலிக்க வேண்டியிருக்கும். இது வாடகைதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் வீடுகள், கடைகளைவிட்டு வெளியேறவும் வாய்ப்புள்ளது.

அடித்தட்டு மக்களை பாதிக்கும்

சென்னையில் நொளம்பூர், ராமாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசதுரஅடிக்கு 50 பைசா வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ரூ.12 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விஐபி பகுதிகளான கோபாலபுரம், போயஸ் கார்டன் பகுதியில் மிகவும் குறைவாக வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து, மாநகரம் முழுவதும் சமமான வரி விகிதத்தை கடைபிடித்தாலே, அரசு எதிர்பார்க்கும் வரி கிடைத்துவிடும். அதை விட்டுவிட்டு, இப்படி 150 சதவீதம் வரைஉயர்த்தினால் மறைமுகமாக அடித்தட்டு மக்களைத்தான் பாதிக்கும்.

தேர்தல் எதுவும் இல்லாததால்..

கடந்த 2019-ல் உயர்த்திய சொத்து வரியை தேர்தலுக்காக அதிமுக திரும்பப் பெற்றது, மத்திய அரசு உயர்த்தச் சொன்னதாக கூறும்திமுக அரசு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு, அடுத்து விரைவில் எந்த தேர்தலும் இல்லாத நிலையில் சொத்து வரி உயர்வை அறிவிக்கிறது.

அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்து, ஓட்டுக்கு பயந்தே 24 ஆண்டுகளாக சென்னையிலும், பிற பகுதிகளில் 14 ஆண்டுகளாகவும் சொத்து வரியை உயர்த்தவில்லை.

அண்மையில் ஒரு திரையரங்கம் ரூ.65 லட்சம் வரி செலுத்தவில்லை என மாநகராட்சி சீல் வைத்தது. இவ்வளவு தொகை சேரும் வரை அமைதி காத்தது, இரு கட்சிகளின் அழுத்தம் தவிர வேறு காரணம் இல்லை. அரசியல் அழுத்தம் இல்லாமல் இருந்தாலே, சொத்து வரி அதிக அளவில் வசூலாகும். அதை விடுத்து, வருவாயை அதிகரிக்க சொத்து வரியை உயர்த்துவது ஏற்புடையதாக இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொடுங்கையூரை சேர்ந்த வாடகைதாரர் ஒருவர் கூறியபோது, ‘‘நான் 450 சதுர அடி பரப்பளவில் ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டில் 1998-ல் ரூ.1,000 வாடகைகொடுத்தேன். அதே அளவு வீட்டுக்கு இப்போது ரூ.7,500 தருகிறேன். சுமார் 7.5 மடங்கு, அதாவது 750 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 ஆண்டுகளாக சொத்து வரி உயராத நிலையில், வாடகையை உயர்த்திக் கொண்டே வந்துள்ளனர். அரசு வரியை உயர்த்தினாலும், உயர்த்தாவிட்டாலும், உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தத்தான் போகின்றனர். அது பழகிவிட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x