Published : 07 Apr 2022 05:01 PM
Last Updated : 07 Apr 2022 05:01 PM

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடனுதவி | ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை - 28 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்; எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கிராமப்புற பகுதிகளின் சாலை மேம்பாடு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், மகளிர் சுய உதவிகளுக்கு கடனுதவி, ஊராட்சிகளில் இணையதள சேவை, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இடம்பெற்ற 28 முக்கிய அறிவிப்புகள்:

> குக்கிராமங்களைப் பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காகச் சாலை மேம்பாட்டுப் பணிகள் 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> மாநில மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஊரகச் சாலைகளை வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக தரம் உயர்த்த 1200 கி.மீ சாலைகள் மற்றும் 136 பாலங்கள் 874 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> எழில்மிகு கிராமங்களை உருவாக்க சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> ஊரகப் பகுதிகளில் 1261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

> நீர் மற்றும் நிலவள மேலாண்மைப் பணிகள் 683.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

> கிராம ஊராட்சிகளில் மின் ஆளுமையை (e-Governance) செயல்படுத்திட அலுவலர் களுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் பயிற்சி வழங்குவதுடன் புதிய கணினி, அச்சிடும் இயந்திரம் மற்றும் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

> ஊராட்சிகளின் அனைத்துச் சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.

> கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.

> கிராம ஊராட்சியின் மின் நுகர்வு மற்றும் குடிநீர்க் கட்டணம் இணையவழி மூலம் செலுத்தும் முறை உருவாக்கப்படும்.

> தமிழகத்தின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், 381.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 லட்சம் பனை விதைகள் மற்றும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

> கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, வேளாண் நிலங்களில் 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள் 11 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

> பசுமையான தமிழகத்தை உருவாக்க, மகளிர் குழுக்களின் கூட்டமைப்புகளை ஈடுபடுத்தி, புதிய நாற்றங்கால்கள் 92.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> இரும்புச்சத்துக் குறை பாடில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முருங்கை மரக் கன்றுகள் வழங்கப்படும்.

> கிராமப்புரக் குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மையங்கள் 59.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்

> 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

> தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணிமேற்பார்வை யாளர்களின் (overseer) நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்.

> ஊரகப் பகுதிகளில் சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருதுகள்
வழங்கப்படும்

> சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக அனைத்து சமூகத்தினரும் பயன் பெறத்தக்க வகையில் முன்மாதிரியாக 10 எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

> நிலமற்ற ஏழைப் பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஊரகப் பகுதிகளில் முதன் முறையாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும்

> வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் மக்கள் குறைதீர்
மையம் அமைக்கப்படும்

> பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்துவதற்காக மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் திட்ட மேலாண்மை அலகுகள் ஏற்படுத்தப்படும்.

> ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் தேசிய அளவில், தலைசிறந்த நிறுவனங்களில் தலைமைத்துவம் மற்றும் மேலாண்மைப் பயிற்சிகள் 3.8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

> 25,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்களுக்கு 30 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.

> ஊரகப் பகுதிகளில் உள்ள 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு 225 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்

> சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்

> மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் 5.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்

> 45,000 இளைஞர்களுக்கு 170 கோடி ரூபாய் செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும்.

> 88 வட்டாரங்களில் 'இளைஞர் திறன் திருவிழா' 1.94 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x