Published : 06 Apr 2022 03:54 PM
Last Updated : 06 Apr 2022 03:54 PM

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இலகுரக வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பண்ணாரி - திம்பம் சாலை | கோப்புப் படம்

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதியளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களினால் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி இறக்க நேரிடுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை கடந்த பிப்.10-ம் தேதி முதல் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் வாகனங்களின் அவசர, அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இரவு நேர போக்குவரத்தில் சில தளர்வுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பு விவரம்: 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்களுக்கும் எப்போதும் அனுமதி இல்லை.அதற்கு கீழான எடையளவு கொண்ட வாகனங்கள் மாலை 6 மணிக்கு மேல் இருந்து காலை 6 மணி வரை அந்த சாலையில் அனுமதிக்கப்படும். வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பால் மற்றும் மருத்துவப் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். 27 கிலோமீட்டர் தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவிக்களை பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைத்திட வேண்டும்.

வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 27 கிலோமீட்டர் சாலையில் உள்ள கிராம மக்களின் வாகனங்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கி அந்த வாகனங்களை அனுமதிக்கலாம். வனவிலங்குகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அந்தப்பகுதியில் அமைக்க வேண்டும்.

வனவிலங்குகளுக்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் சென்று வரலாம். மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் செல்லலாம் என தீர்ப்பளித்து வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x