Published : 06 Apr 2022 06:29 AM
Last Updated : 06 Apr 2022 06:29 AM

திருச்சி சிறப்பு முகாம் வளாகத்துக்குள் மரக்கன்றுகளை வளர்த்து தானமளிக்கும் இலங்கை தமிழர்

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் மகேந்திரனால் வளர்த்து தானமாக அளிக்கப்பட்ட மரக்கன்றுகளுடன் அரசு அதிகாரிகள் மற்றும் தண்ணீர் அமைப்பினர்.

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர், மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், தன்னை சந்திக்க வருவோர் அளிக்கக்கூடிய பழங்களிலுள்ள விதைகள் மற்றும் நண்பர்கள் வழியாக பெறக்கூடிய விதைகளைக் கொண்டு சிறப்பு முகாம் வளாகத்துக்குள்ளேயே மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, அதை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு இலவச மாக கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அவரால் தானமளிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக அவர் வளர்த்து வந்த புங்கன், பாதாம், அத்தி, மா, புளியமரம், கொய்யா, வேம்பு உள்ளிட்ட 1,500 மரக்கன்றுகள் மற்றும் புங்கன் மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட புங்கன் விதைகளை முகாம்களுக்கான மண்டல தனித்துணை ஆட்சியர் ஜமுனாராணி, கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் கி.சதீஷ் குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா உள்ளிட்டோரிடம் மகேந்திரன் நேற்று முன்தினம் வழங்கினார். இயற்கை ஆர்வலராக விளங்கும் மகேந்திரனை அரசு அதிகாரிகளும், அங்குள்ள சக முகாம்வாசிகளும் பாராட்டினர்.

இந்த மரக்கன்றுகளை கல்லூரி, பள்ளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக கொடுக்க உள்ளதாக தண்ணீர் அமைப்பினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x