Published : 05 Apr 2022 06:38 AM
Last Updated : 05 Apr 2022 06:38 AM

கர்நாடகாவிலிருந்து வந்த 30 யானைகள் உரிகம் வனச்சரகத்தில் முகாம்: சிறப்பு வேட்டை தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

ஓசூர்: கர்நாடகா வனப்பகுதியிலிருந்து வந்த 30 யானைகள் காவிரி ஆற்றைக் கடந்து தமிழக வனப்பகுதியான பிலிகல் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாக்கும் பணியில் உரிகம் வனச்சரக சிறப்பு வேட்டை தடுப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் வன உயிரினங்களை பண்டிகை காலத்தில் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பண்டிகை காலத்தில் சிறப்பு வேட்டை தடுப்பு குழு அமைக்கப்பட்டு காப்புக்காடுகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் யுகாதி திருநாள் மற்றும் அதைத்தொடர்ந்து வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உத்தரவின் பேரில் உரிகம் வனச்சரகத்தில் பண்டிகை கால வேட்டை தடுப்பு கண்காணிப்பு பணிக்காக ஒரு குழுவுக்கு 8 பேர் என மொத்தம் 3 சிறப்பு வேட்டை தடுப்பு குழு அமைக்கப்பட்டு, தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறுகையில், காவிரி ஆற்றை ஒட்டியுள்ள தமிழக உரிகம் வனச்சரக பிலிகல் காப்புக்காடு தொல்மத்தி வனப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றை கடந்துவந்த 3 குட்டி யானை உட்பட 30 யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றைக் கண்காணித்து பாதுகாக்கும் பணியில் சிறப்பு வேட்டை தடுப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் உரிகம் வனச்சரகத்தில் உள்ள கெஸ்தூர், பிலிகல், மல்லஹள்ளி, தக்கட்டி, உரிகம், மஞ்சுகொண்டப்பள்ளி, கெஸ்தூர் விரிவாக்க காப்புக்காடு ஆகிய 7 காப்புக்காடுகளில் வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பு, வாகனச் சோதனை பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x