Last Updated : 20 Jun, 2014 09:26 AM

 

Published : 20 Jun 2014 09:26 AM
Last Updated : 20 Jun 2014 09:26 AM

ஜெ.க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: முந்தைய திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் இறுதிவாதம்

“ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் பெங்களூர் சிறப்பு நீதிமன் றத்தில் தனது இறுதி வாதத்தின்போது எடுத்துரைத்தார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த மே மாதம் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து வழக்கின் மூன்றாம் தரப்பான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தங்களுடைய தரப்பு இறுதி வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

ஜெ. வாதம் தொடங்கியது

இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் தன‌து இறுதி வாதத்தை தொடங்கினார். அவர் வாதிடுகையில், ''1991-96 கால கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வழக்கை தொடர்ந்தது. அரசியல் எதிரியான திமுக தொடர்ந்த 12 வழக்குகளில் 11 வழக்குகளை எதிர்கொண்டு, தான் குற்றமற்றவர் என நிரூபித்து ஜெயலலிதா விடுதலையாகி உள்ளார்.

அதே போல இந்த வழக்கிலும் ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. இவ்வழக்கை விசாரித்த த‌மிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு முற்றிலும் சட்டத்திற்கு புறம்பாகவும், திமுக அரசிற்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பொய்யான சாட்சிகளை அரசு தரப்பில் சேர்த்து அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கின் விசாரணையின் போது நல்லம்ம நாயுடு தனது அதிகாரத்தை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளார்'' என்றார்.

ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதத்தை பதிவு செய்துகொண்ட‌ நீதிபதி டி'குன்ஹா, வெள்ளிக்கிழமையும் (இன்று) இறுதி வாதத்தைத் தொடருமாறு வழக்கறிஞர் பி.குமாருக்கு உத்தரவிட்டார்.

நிர்வாக இயக்குநரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

இதனினிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெ ரியல் எஸ்டேட், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், கிரீன் பார்ம் ஹவுஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய 5 தனியார் நிறுவனங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் ஆஜரான தனியார் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சுரேஷ்குமாரிடம் நீதிபதி டி'குன்ஹா,'இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது மனு தாக்கல் செய்தது ஏன்? யாரேனும் உங்களை மனு தாக்கல் செய்யும்படி வற்புறுத்தினார்களா? வழக்கு குறித்த விபரங்கள் உங்களுக்கு எப்படி தெரியும்? மனு தாக்கல் செய்ததன் பின்னணியில் இவ்வழக்கை தாமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்கிறதா?' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனால் தடுமாறிய சுரேஷ் குமார்,' சசிகலாவும், இளவரசியும் எங்களுடைய நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளில் இவ்வழக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொண்ட பிறகே இம்மனுக்களை தாக்கல் செய்தேன். யாரும் என்னை வற்புறுத்தவில்லை''என்றார்.

இதனிடையே பேசிய தனியார் நிறுவனங்களின் வழக்கறிஞர் குலசேகரன்,'சசிகலா,இளவரசி குறித்து தவறுதலாக எங்களுடைய தரப்பு சாட்சி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதனை நீதிமன்ற குறிப்பில் இருந்து நீக்கமாறு கேட்டார். அதற்கு நீதிபதி டி'குன்ஹா மறுப்பு தெரிவித்தார்.

இறுதியாக பேசிய நீதிபதி டி 'குன்ஹா,'' 5 தனியார் நிறுவனங்கள் தொடர்பாக நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமாரிடம் இருக்கும் அனைத்து அசல் ஆவணங்களையும் வருகின்ற திங்கள்கிழமைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் மனுக்கள் மீதான விசாரணை வருகிற திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x