Published : 27 Jun 2014 08:33 AM
Last Updated : 27 Jun 2014 08:33 AM

அட்சயா காப்பகத்தில் 120 பேர் மர்ம மரணம்: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை அட்சயா தனியார் தொண்டு நிறுவனக் காப்பகத்தில் 14 மாதங்களில் 120 பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஏ.டி.எஸ்.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காப்பகத்தில் கல்லூரி மாணவிகள் உதவியுடன் 3-வது முறையாக ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அட்சயா காப்பக முறைகேடு தொடர்பாகப் பணியில் உள்ள மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கவும், காப்பகத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்ட தலைவர் சி.முத்துராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆணையர் டி.கீதா 2-வது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் 2-வது ஆய்வில் காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரங்களை அளித்தனர்.

காப்பகத்தில் 14 மாதங்களில் 120 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இதய நோயால் இறந்ததாகக் கூறினர். ஆனால், அவர்கள் இறப்புக்கு முன்பு இதய நோய்க்கு சிகிச்சை அளித்த விவரம் இல்லை என அறிக்கையில் கூறப் பட்டிருந்தது. ஏ.டி.எஸ்.பி. சியா மளா தேவி ஆஜராகியிருந்தார். விசாரணைக்குப்பின், காப்பகத் தில் நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இதுவரை நடத்திய விசாரணை திருப்தியாக இல்லை. காப்பகத்திலிருந்து ஓடிய பெண், 3 ஊழியர்கள் மீது புகார் தெரி வித்துள்ளார். அந்த ஊழியர்கள் இன்னும் காப்பகத்தில் உள்ளனர். அவர்களை காப்பகத்தில் நுழையவிடக்கூடாது. ஏ.டி.எஸ்.பி. நேரடியாக காப்பகத்துக்குச் சென்று 120 பேர் இறந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

வழக்கறிஞர் ஆணையர் மீண்டும் காப்பகத்துக்கு சென்று ஆவணங்களை சேகரிக்க வேண்டும். அதற்கு லேடி டோக் கல்லூரி மாணவிகளின் உதவி பெறலாம். தங்கியிருப்பவர்களில் குடும்பத்தினருடன் சேர விருப்ப மாக உள்ளவர்களின் பட்டியலை தயாரித்து, அதை திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். காப்பகத்திலிருந்து ஓடிய பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x