Last Updated : 23 Mar, 2022 03:30 PM

 

Published : 23 Mar 2022 03:30 PM
Last Updated : 23 Mar 2022 03:30 PM

182 ஏக்கர் அரசு நில மோசடி வழக்கு; அதிமுக நிர்வாகி ஜாமீன் கோரி மனு: சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை உயர் நீதிமன்ற கிளை | கோப்புப் படம்

மதுரை: தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் தனியார் பெயருக்கு பட்டா வழங்கிய மோசடியில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தாமரைக்குளத்தில் 60 ஏக்கர் 5 சென்ட், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் 2 சென்ட், வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் 43 சென்ட் என மொத்தம் 182.50 ஏக்கர் அரசு நிலம் 2017 முதல் 2021 செப்டம்பர் வரை வருவாய் அதிகாரிகள் உதவியுடன் அரசியல் பிரமுகர்கள், தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக பெரியகுளம் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலர் அன்னபிரகாஷ், பெரியகுளத்தில் கோட்டாட்சியர்களாக பணிபுரிந்த ஆனந்தி, ஜெயபிரித்தா, வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ் மற்றும் முத்துவேல்பாண்டியன், போஸ், அழகர், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அன்னபிரகாஷ், பிச்சைமணி, அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அன்னபிரகாஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 1997-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விரிவாக்கப்பணிக்காக என் குடும்பத்துக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படு்த்தியது. அதற்கு அரசு இழப்பீடு தரவில்லை. இதனால் மாற்று இடம் வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு எனக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கு பட்டாவும் வழங்கப்பட்டது.

ஆனால் பட்டா வழங்கியது வருவாய் ஆவணங்களில் பதிவாகவில்லை. சம்பந்தப்பட்ட நிலத்தை 20 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். அரசியல் உள்நோக்கம் காரணமாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு சென்ற போது போலீஸார் என்னை கைது செய்தனர். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-க்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x