Published : 23 Mar 2022 01:46 PM
Last Updated : 23 Mar 2022 01:46 PM

505-ல் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியல்

சட்டப் பேரவையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று தமிழக சட்டப்பேரவையில், திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும் விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தகவல்கள்: தமிழக சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருவது குறித்தும் சில கருத்துகளும், விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதால், அவை குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கும், பொது மக்களுக்கும் இப்பொருள் குறித்த உண்மை நிலையை விளக்கும் வகையில், உங்கள் அனுமதியுடன் இந்த அவையில் ஒரு வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஓர் அறிக்கையை சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் இப்பொழுது நான் வெளியிட விரும்புகிறேன்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.திமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கும், மாநிலப் பொருளாதாரத்தை மீட்பதற்கும், துறைவாரியான முன்னேற்றத்திற்கும், ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் சொல்லப்படாத நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைப் பெற்று அமைந்துள்ள இந்த அரசு, அதனை நிறைவேற்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, கடந்த மே 7 ஆம் தேதியன்று பதவியேற்ற ஒரு சில மணித் துளிகளிலேயே தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை நான் வெளியிட்டேன்.

  • 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி.
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
  • மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். (மேசையைத் தட்டும் ஒலி)
  • மக்களின் மனுக்களின் மீது தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை.
  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு.

இந்த ஐந்தில், முதல் நான்குமே திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. கடந்த பத்து மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சில வாக்குறுதிகளை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

> வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக இரண்டு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

> கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.

> கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

> பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

> ஊரக பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் செயல்படுத்துவது.

> ‘நமக்கு நாமே’ திட்டம். உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவது.

> "இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" என்ற உன்னதத் திட்டத்தை செயல்படுத்துவது.

> அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறுக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல்.

> பத்திரிகையாளர்கள், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன்/நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

> மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி மூன்று வேளாண் சட்டங்களும் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

> NEET தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

> கரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை.

> அதேபோல், கரோனா நோய்த் தொற்றால் காவல் துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை.

> குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல்.

> தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

> பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

> தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

> ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

> மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளோடு, இடம் பெறாத அறிவிப்புகளும் அடங்கும். அவை குறித்து நடவடிக்கைகள் தொடர்புடைய துறைகளால் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,இந்த மாமன்றத்தில்ஆளுநர் ஆற்றிய உரையில் 52 தேர்தல் வாக்குறுதிகளும்; ஆளுநரின் உரை குறித்த என்னுடைய பதிலுரையில் 1 வாக்குறுதியும்;

நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2021–22 ஆம் ஆண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் 33 வாக்குறுதிகளும்;வேளாண்மைத் துறை அமைச்சரால் வேளாண்மைக்காக தாக்கல் செய்யப்பட்ட 2021-22 ஆம் ஆண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 21 வாக்குறுதிகளும்; விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் 3 வாக்குறுதிகளும்;அவரவர் துறை சார்பாக அமைச்சர் பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 78 வாக்குறுதிகளும்;

இதர அறிவிப்புகளில் 10 வாக்குறுதிகளும், நேரடியாக நிறைவேற்றப்பட்ட 10 வாக்குறுதிகளும் என இதுவரை மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை இந்த அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது.

இந்த அரசு பதவியேற்று, இதுவரை நடைபெற்ற சட்டசபை கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் குறிப்பிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல்வேறு கொள்கை அளவிலான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், தமிழக மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பலவகையான நலத்திட்ட உதவிகள் என சொல்லாதவற்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக,

> பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த மாணவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்த கரோனா பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியை மட்டுமின்றி அவர்களின் மனதையும் பாதித்துவிட்டது. இந்தப் பாதிப்பை சரி செய்யக்கூடிய விதமாக தனித்துவம் கொண்ட ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சியை இந்த அரசு மேற்கொண்டது.

> மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக இல்லங்களுக்கே சென்று, அனைவருக்கும் நல வாழ்வு என்கிற உயரிய நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்துவது.

> தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48” என்ற உயிர் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவது;

> தமிழகத்தில் உள்ள சிற்றூர்கள் அனைத்தும் அவற்றின் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது;

> மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தனித்துவத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய எனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவது

> அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற் கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில், ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல்.

> திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை.

> கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் அரசே ஏற்பு.

> கரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை.

> தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட, வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றப்பட்டு, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

> பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறையினர் “முன்களப் பணியாளர்” களாக அறிவிப்பு.

> அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்வு.

> கரோனா தொற்றால் மரணமடைந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத் துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு.

சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x