Last Updated : 15 Mar, 2022 02:22 PM

 

Published : 15 Mar 2022 02:22 PM
Last Updated : 15 Mar 2022 02:22 PM

புதுச்சேரியில் கடல் அழகை ரசிக்கும் வகையில் ரூ.13 கோடியில் நவீன ஹோட்டல்: இரு மாதங்களில் பணி நிறைவு

படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: ”சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.13 கோடியில் நட்சத்திர அந்தஸ்துடன் நவீன ஹோட்டல் கட்டுமான பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்கரையில் பழைய சாராய வடி ஆலை இடத்தில் கடல் அழகை ரசிக்கும் வகையில், அரசின்புதுவை கடற்கரை சாலையின் இறுதியில் அரசின் சாராய வடி ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை வில்லியனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் கால் நுாற்றாண்டாக இயங்காமல் வந்தது. இந்த இடம் பயன்படுத்தப்படாமல் மோசமடைந்தது. இதையடுத்து அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்காக அப்பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடத்தில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் ஹோட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் ரூ.13 கோடி செலவில் தொடங்கி நடந்து வந்தது. இப்போது பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 3,000 சதுரமீட்டரில் கீழ்தளம், 2,500 சதுர மீட்டரிலும், அதற்கு மேல் சிறிய பகுதி என 6,000 சதுரமீட்டரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கீழ்தளத்தில் விழாக்கள் நடத்தும் வகையில் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் 14 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளும் கடல் அழகை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் திறந்தவெளி திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் அறையில் தங்குபவர்கள் கடல் அழகை அருகே சென்று பார்க்கும் வகையிலும் கட்டுமானப்பணி நடந்துள்ளது. தற்போது கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் ஏழுமலை கட்டட அமைப்பு குறித்து விளக்கினார். அனைத்து பகுதிக்கும் சென்று அனைவரும் பார்வையிட்டனர்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "கட்டிடப் பணி இரு மாதங்களில் நிறைவடையும். இக்கட்டடத்தை தனியாரிடம் தரலாமா என்று ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அழகிய கட்டடமாக உருவாகிய இப்பகுதியை மேலும் அழகுப்படுத்துவோம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்" என்று குறிப்பிட்டார்.

உக்ரைனில் இருந்து புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் திரும்பி விட்டார்களா என்று கேட்டதற்கு, ’அனைவரும் வந்துவிட்டனர்’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x