Published : 13 Mar 2022 10:19 AM
Last Updated : 13 Mar 2022 10:19 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவு: இந்திய, இலங்கை தமிழர்கள் ஊர் திரும்பினர்

ராமேசுவரம்

கச்சத்தீவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முடிவடைந்தது. இரு நாடுகளைச் சேர்ந்த 164 பேர் பங்கேற்றனர். அனைவரும் நேற்று மாலை சொந்த ஊர் திரும்பினர்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்க ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகு மற்றும் 1 நாட்டுப்படகில் 76 பேர் சென்றனர். இலங்கையிலிருந்து 88 பேர் வந்திருந்தனர்.

நெடுந்தீவு அருட்தந்தை வசந்தம், ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம், ராமேசுவரம் பங்குத்தந்தை தேவசகாயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். பின்னர், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயம் தலைமையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவில் புனித அந்தோணியாரின் சிலை வைக்கப்பட்ட தேர் பவனியும் நடந்தது.

இதனிடையே, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்தது. இதில் இரு தரப்பு மீனவர்களும் மீன்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. அதன் பின் மாலையில் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் இரு நாடுகளையும் சேர்த்து 200 பேருக்குள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி இரு நாடுகளிலிருந்து மொத்தம் 164 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஓராண்டுக்குப் பின்பு சந்திப்பதால் இரு நாடுகளை சேர்ந்தவர்களும் மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x