Published : 12 Mar 2022 05:23 PM
Last Updated : 12 Mar 2022 05:23 PM

அசாம் இளைஞர் ரயிலில் திடீரென உயிரிழப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை

திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்ட அசாம் மாநில இளைஞர் அர்பிந்த்ராயின் சடலத்தை பார்வையிட்டு விசாரிக்கும் ரயில்வே போலீஸார்.

திருப்பூர்: அசாம் மாநில இளைஞர் ரயிலில் உயிரிழந்த நிலையில், சில மணிநேர பயணத்துக்கு பின் அவரது உடல் திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஒரு நாள் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை 10.45 மணிக்கு திருப்பூருக்கு வந்தடைந்தது. ரயிலில் எஸ்.3 பெட்டியில் இருந்து 2 வடமாநிலத்தினர் இறங்கினர். அவர்கள், கம்பளி போர்த்திய நிலையில் ஆண் சடலத்தை எடுத்து வந்தனர்.

இதனைக் கண்காணிப்பு கேமராவில் பார்த்த ரயில்வே போலீஸார், அவர்களை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர் சில்சார் பகுதியை சேர்ந்த அர்பிந்த்ராய் (30) என்பதும், பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அர்பிந்த்ராய் சில்சாரிலிருந்து திருப்பூர் வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை வந்ததும் உடன் இருந்தவர்கள், அவரை எழுப்பியுள்ளனர். அப்போது அவர் சடலமாக இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்த அலைபேசி மூலம் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை திருப்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கும்படியும், தாங்கள் வந்து பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ரயிலில் வந்த 2 பேர் சடலத்தை எடுத்து வந்துள்ளனர்.

இதன் பின்னர் சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸார், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சுவலி காரணமாக அர்பிந்த்ராய், ரயில் பயணத்தில் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் ஆண் சடலத்துடன் சில மணிநேரம் வடமாநிலத் தொழிலாளர்கள் பயணித்தது உடன் வந்த பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சடலத்தை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்து, திருப்பூரில் உள்ள அர்பிந்த்ராய் அக்காவிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x