Published : 11 Mar 2022 12:46 PM
Last Updated : 11 Mar 2022 12:46 PM

நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’எனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதில், எவ்வித தொடர்பும் இல்லாத நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என்னை இந்த வழக்கில் தவறாக இணைத்துள்ளனர் . முன்னாள் அமைச்சரான எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்தமுறை அதிமுக ஆட்சி என்பதால் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தார்ர் தரப்பிலும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x