Published : 03 Mar 2022 12:31 PM
Last Updated : 03 Mar 2022 12:31 PM

ஆசிரியர் பணியிடங்களுக்காக மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது அநீதி: தினகரன் விமர்சனம்

சென்னை: "தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்காமல் திமுக ஏமாற்ற நினைக்கிறது" என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

இதுகுறித்து இன்று இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர்களை இப்படி நம்பவைத்து கழுத்தறுப்பது சரியானதல்ல.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் பணியிடங்களில் அவர்களை பணி அமர்த்தவேண்டும். திமுக அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து தொடர்ந்து நடந்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x