Last Updated : 23 Feb, 2022 05:50 PM

 

Published : 23 Feb 2022 05:50 PM
Last Updated : 23 Feb 2022 05:50 PM

டெபாசிட் பணமும் செலுத்தி, ஏழைப் பெண் வேட்பாளரை ஜெயிக்கவைத்த வார்டு மக்கள் - இது நாகர்கோவில் நெகிழ்ச்சி!

வெற்றி வேட்பாளர் ராணியும், அவரது வீடும்.

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சியின் 35-வது வார்டில், முழு நேர சமூக சேவையால் மக்களைக் கவர்ந்த ஏழை பெண் வேட்பாளர் எவ்வித பணபலமும் இன்றி தேர்தலை சந்தித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு டெபாசிட் பணத்தையும் வார்டு மக்களே செலுத்தினர். தன்னலமற்ற சேவைக்கு மக்கள் வழங்கிய இந்தப் பரிசு குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நாகர்கோவில் செட்டிக்குளம் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜன் (50). இவரது மனைவி ராணி (45). குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலித் தொழில் செய்து வந்த ராஜன் விடுமுறை நாளில் மட்டும் அப்பகுதி மக்களுக்கு சமூக சேவையாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுவே அவருக்கு மனதிருப்தியை கொடுக்க முழு நேரத்தையும் பொதுமக்களின் சேவைக்காக ஒதுக்கினார். கரன்ட் பில் கட்டுவதில் இருந்து முதியோர் பென்ஷன், ரேஷன் கார்டு வாங்கி கொடுப்பது மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மக்களுடன் சென்று நடவடிக்கை எடுக்க செய்வதுச் போன்ற சேவைகளை செய்து வந்துள்ளார்.

குறிப்பாக முதியவர்கள், கணவரை இழந்தவர்கள், ஆதரவற்றோர் 45 பேருக்கு பல நாட்கள் அலைந்து அரசின் ரூ.1,000 பென்ஷன் வாங்கி கொடுத்துள்ளார். இதைப்போல் அவரது மனைவி ராணியும் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் 35-வது வார்டு பகுதி மக்களால் கவரப்பட்ட அவரை, அப்பகுதியில் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகி முறைப்படி சேவை செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வெற்றி வேட்பாளர் சேதமடைந்த ராணியின் வீடு

கடந்த தேர்தலில் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது அதே பகுதியில் (47-வது வார்டு) சுயேச்சையாக ராணி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது வறுமையால் வாடிய ராணிக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு டெபாசிட் கட்டுவதற்கும் பணம் இல்லாமல் தவித்துள்ளார். அவருக்கு அப்பகுதி மக்களே ரூ.100, ரூ.500 என சேகரித்து ரூ.4,000 கொடுத்து டெபாசிட் கட்டச் சொல்லியுள்ளனர். இதன் பலனாக தேர்தலில் நின்ற ராணி எவ்வித பணபலமும், ஆர்ப்பாட்டமின்றி பிரச்சாரம் செய்தார். அவருடன் கணவர் ராஜன் மட்டுமே சென்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துள்ளார். வாக்கு கேட்டு துண்டுச் சீட்டு அடிக்கக்கூட காசு இல்லாததால் மக்கள் கொடுத்த பணம் மூலம் குறைந்த அளவில் அவற்றை செய்தனர்.

அதே 35-வது வார்டில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் எவ்வித பணபலமும் இன்றி மக்கள் ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கிய ராணி 1,483 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேரிபிளாரன்ஸ் 227 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி 587 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் பணபலத்துடன் களமிறங்கிய வேட்பாளர்களுக்கு மத்தியில் மக்கள் சமூக சேவையால் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஏழை வேட்பாளர் ராணி, குமரி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இது குறித்து தேர்தலில் வெற்றிப் பெற்ற ராணி கூறுகையில், ”எங்கள் வார்டு மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்வதை நானும், கணவரும் வழக்கமாக கொண்டுள்ளோம். வறுமையில் இருந்தாலும் மக்கள் சேவையை விட பணம் பெரிதாக தெரியவில்லை. ரேஷன் அரிசி, பொருட்கள் மூலமே அன்றாட வாழ்க்கையை கழிக்கிறோம். எங்களுக்கு வார்டில் மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் தங்கள் கட்சியில் சேருமாறு பல அரசியல் கட்சியினர் கேட்டு வருகின்றனர். இதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எந்த கட்சியிலும் சேராமல் பொது சேவையாற்றினால்தான் அது உண்மையாக இருக்கும்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x