Published : 23 Apr 2016 02:25 PM
Last Updated : 23 Apr 2016 02:25 PM

சுற்றுலா வாய்ப்புகளை இழக்கும் உதகையை கவனிப்பது யார்?- வெற்றியை தீர்மானிக்கும் உதகையின் பிரச்சினைகள்

உதகை தொகுதியின் தலையாய பிரச்சினை சுற்றுலா வாய்ப்புகள். அதை சார்ந்து இயங்கும் தொழில்களும் மிகுதி. அத்துடன் காய்கறி மற்றும் தேயிலை விவசாயமும் அதிகம். இவற்றை அடுத்தடுத்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும், அதன் மூலம் அமைச்சர் ஆனவர்களும் கண்டு கொள்ளவில்லை; வாய்ப்பிருந்தும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை. இந்த பிரச்சினையின் மையமே வரவிருக்கும் தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளது என்பதே மக்களின் பேச்சாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.மில்லர் மற்றும் புத்திசந்திரன் ஆகியோர் அதிமுக சார்பில் சுற்றுலா அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இருப்பினும் சுற்றுலா மேம்பாடு இல்லாமல் சுற்றுலா வாய்ப்புகளை இழந்து வருகிறது நீலகிரி மாவட்டம் என்கின்றனர் அவர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கே.விஜயன் கூறும்போது, ஆண்டுக்கு சுமார் 20 லட்சத்துக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகை நகரில் சுற்றுலா மேம்பாட்டுக்காக எவ்விதத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தொட்டபெட்டாவிலிருந்து உதகை குதிரைப் பந்தய மைதானம் வரை ரோப் கார் திட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படவில்லை. மாவட்ட மக்கள் உயர் சிகிச்சை பெற 3 மணி நேரம் பயணித்து கோவை மாவட்டம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டால், உரிய நேரத்தில் மக்களுக்கு சிகிச்சை கிடைக்க வாய்ப்புள்ளது.

உதகை நகரில் தற்போது செயல்படுத்தப்படும் 3-வது குடிநீர்த் திட்டம் இழுபறியாகவே உள்ளது. கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்படாததால், கழிவு நீர் உதகை ஏரியில் கலந்து சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாகியுள்ளது. உதகை தொகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்ட மக்களே பெரிதும் எதிர்பார்த்திருந்த மாஸ்டர் பிளான் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு பொதுமக்கள் இடையூறின்றி வீடு கட்டிக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல, நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. இச் சாலைகளை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். உதகை நகரையும், இத் தொகுதியையும் மேம்படுத்த அரசியல் கட்சியினர் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை’ என்றார்.

உதகை எம்எல்ஏ புத்திசந்திரன் கூறும்போது, ‘மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள 24,000 விவசாயிகள் பயனடையும் வகையில் கிலோவுக்கு ரூ.2 மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்தி லிருந்து ரூ. 38 கோடி செலவில் மூன்றாவது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், உதகை நகரப் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப் பரப்பு உள்ளதால், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

உதகை ஹெச்பிஎப் பிரச்சினை மத்திய அரசை சார்ந்தது. ஹெலிகாப்டர் சேவை, ரோப் கார் சேவைகளை நிறைவேற்ற மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதில், மாநில அரசின் பங்கு வெகு குறைவு. உதகை நகரின் முக்கியப் பிரச்சினையான பார்க்கிங் பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x