Published : 21 Feb 2022 05:31 PM
Last Updated : 21 Feb 2022 05:31 PM

21 மீனவர்கள் விடுதலையானதில் மகிழ்ச்சி; எஞ்சிய 29 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: அன்புமணி

கோப்புப் படம்

சென்னை: ”இலங்கைச் சிறைகளில் இருந்து 21 மீனவர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, மீதமுள்ள 29 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 21 பேர் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 21 நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் விடுதலையாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்கள் தவிர, நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் உட்பட மொத்தம் 29 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x