Published : 15 Feb 2022 10:10 PM
Last Updated : 15 Feb 2022 10:10 PM

பிரச்சாரக் களத்தில் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவுடனான கோஷ்டி பூசலால் ஒதுங்கி நிற்கும் மாநகர முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலைப்பார்பார்களோ என்ற கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சி அதிமுக மேயராக 2011-2016-ம் ஆண்டு வரை விவி.ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகர செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதனால், மாநகர அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டியாக செயல்பட்டனர். மாநகரத்தில் நடந்த மாநகராட்சி விழாவுகளுக்கு மேயர் ராஜன் செல்லப்பா செல்லூர் கே.ராஜூவை அழைக்க மாட்டார். அப்படியே அரசு விழாவுகளில் இருவரும் ஒரே கலந்து கொண்டாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளமாட்டார்கள். அந்தளவுக்கு இருவரும் மாநகர அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலத்திலே எதிரும், புதிருமாக அரசியல் செய்தனர். இந்த இருவரையும் சார்ந்து மாநகர கட்சி நிர்வாகிகளும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர்.

கடந்த 2016 சட்டசபை நேரத்தில் ராஜன் செல்லப்பா மேயர் பதவியை ராஜனமா செய்துவிட்டு, வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரானார். ஆனால், மாநகர கட்சியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் செல்லூர் கே.ராஜூ வசமானது. அதன்பிறகு கடந்த மக்களவைத் தேர்தலில் ராஜன் செல்லப்பா மகனுக்கு ‘சீட்’ கிடைப்பதற்கு செல்லூர் கே.ராஜூவும் ஆதரவாக இருக்கும் அளவிற்கு இருவரும் ராசியானார்கள். ராஜன் செல்லப்பா, கட்சியில் தன்னை விட ஜூனியரான செல்லூர் கே.ராஜூவை தற்போதும் ‘மினிஸ்டர்’ என்றும், செல்லூர் கே.ராஜூவும் ராஜன் செல்லப்பாவை ‘அண்ணே’ என்று அன்புடன் அழைத்தும் பரஸ்பரம் நட்பு பாராட்டுகின்றனர்.

ஆனால், ராஜன் செல்லப்பா மேயராக இருந்த காலத்தில் செல்லூர் கே.ராஜூ மாநகரத்தில் தன்னை எதிர்த்து மாநகரத்தில் அரசியல் செய்தவர்களை கட்டம் கட்ட ஆரம்பித்தார். அதனால், மாநகரத்தில் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்(துணை மேயராக இருந்தவர்), முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், முன்னாள் மண்டலத் தலைவர்கள் ராஜபாண்டி, சாலைமுத்து, கண்ணகி பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டனர். இவர்கள், ஒரே அணியாக செயல்படாமல் தனித்தனியாக கோஷ்டியாக செயல்படுவதால் அவர்களால் மாநகர கட்சியில் செல்வாக்கு பெற முடியவில்லை. ஆனாலும், செல்லூர் கே.ராஜூவை மீறி, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் ‘சீட்’ பெற்றனர். ஆனால், தோல்வியடைந்ததால் மாநகர அதிமுகவில் செல்லூர் கே.ராஜூவை மீறி செயல்படமுடியவில்லை. செல்வாக்கும் பெற முடியவில்லை. அதனால், கோபாலகிருஷ்ணன், சரவணன் மற்றும் செல்லூர் கே.ராஜூவால் புறக்கணிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் சட்டசபை தேர்தலுக்கு பிறகு தீவிர கட்சிப்பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி தேர்தலில் செல்லூர் கே.ராஜூ, முன்னாள் மண்டலத்தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் 40 சதவீதம் பேருக்கு ‘சீட்’ வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில், சாலைமுத்து மட்டும் கட்சித் தலைமையிடம் பேசி ‘சீட்’ பெற்று வந்தார். மற்றவர்களில் சிலர் சுயேச்சையாகவும், சிலர் மாற்றுக்கட்சிகளுக்கும் சென்று போட்டியிடுகின்றனர். அவர்களால் அந்த வார்டுகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், தற்போது வரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அவர், தலைவர்கள் மதுரைக்கு வரும்போது மட்டும் பிரச்சாரத்தில் தலைகாட்டுகிறார். முன்னாள் எம்எல்ஏ சரவணன், அவரது பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடந்த சில நாளாக சென்று பிரச்சாரம் செய்கிறார்.

‘சீட்’ கிடைக்காத மற்ற நிர்வாகிகள் வீட்டிலே முடங்கிவிட்டனர். அதனால், தற்போது 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், செல்லூர் கே.ராஜூவுக்கு எதிரான கோஷ்டியினர் உள்ளடி வேலைகளால் வெற்றிவாய்ப்பு பறிபோகுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். சமீபத்தில் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. அவர் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மாநகர கோஷ்டிபூசலில் பெரிதாக தலையிட விரும்பவில்லை. அதனால், மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் முழுவதுமாக மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவை நம்பியே களம் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x