Published : 15 Feb 2022 01:00 PM
Last Updated : 15 Feb 2022 01:00 PM

'அத்தனை பேச்சும் நச்சு; ஏன் வெளியே விட வேண்டும்?': பப்ஜி மதன் மனு தள்ளுபடி

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர்மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உடல் நிலையை காரணம் காட்டி முன்கூட்டியே விசாரணை கோருவதாகவும், மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும், அவருக்கு பிசியோதெரப்பி சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளதாகவும், அவரை ஏன் வெளியே விட வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினர். மேலும் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x