Published : 11 Feb 2022 11:51 AM
Last Updated : 11 Feb 2022 11:51 AM

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அனுப்ப உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் அவர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது என கேள்வி எழுப்பியதுடன், வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால்தான் சமபந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும் என தெரிவித்தார். அறிக்கை வழங்க மறுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியும் எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டப்பூர்வமான பணி என்றும், அரசியலமைப்புச் சட்ட பணி இல்லை என தெரிவிக்கப்பட்டது. சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கபட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி பார்த்திபன் இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு: "நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் முன், சூரப்பாவுக்கு அரசு வழங்க வேண்டும். அதற்கு இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளித்து சூரப்பா அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்". இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x