Last Updated : 09 Feb, 2022 09:48 PM

 

Published : 09 Feb 2022 09:48 PM
Last Updated : 09 Feb 2022 09:48 PM

ஸ்டாலினும் உதயநிதியும் நகைக்கடன் வாக்குறுதியால் மக்களை கடனாளியாக்கினர்: இபிஎஸ் பேச்சு

படம்: வி.எம்.மணிநாதன்

"மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை கடனாளியாக்கினர்" என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

மேலும், "அரசு அதிகாரிகள், காவல் துறையினர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதை திருத்திக்கொள்ளாவிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

வேலூர் மாநகராட்சி மற்றும் திருவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: "வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் முறையாக மனுதாக்கல் செய்துள்ளனர். அதிமுக வெற்றியை பொறுக்க முடியாத திமுகவினர் சதிதிட்டம் தீட்டி வேண்டுமென்ற அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய அதிகாரிகளை மிரட்டியதால் சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் தேர்தலை முறையாக சந்திக்க வேண்டும். அதைத் தவிர்த்து கோழைத்தனமாகவும், திருட்டுத்தனமாக திமுக வெற்றி பெற முயற்சி செய்கிறது. இதையெல்லாம் மக்கள் கவனிக்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 525 வாக்குறுதிகளை திமுக கூறியது. அதில் ஒன்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் அதன் லட்சணம் தெரிந்துவிட்டது.

ஆனால், வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 அதன் பிறகு ரூ.2,500 வழங்கினோம். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் எனக்கூறினார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. 21 வகையான பொருட்களை வழங்குவதாக கூறினார். அவை அனைத்தும் தரமற்றது என்பதை மக்களே கூறிவிட்டார்கள்.

தேர்தலின் போது மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதியை கூறினர். இதை நம்பிய மக்கள் 46 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்தனர். ஆனால், அதில் 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர் என தெரிவித்ததால் எஞ்சியுள்ளவர்கள் ரூ.12 ஆயிரம் வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களை கடனாளி ஆக்கியவர் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் விளம்பரப் பிரியர். தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்வதையும், நடைபயிற்சி மற்றும் சைக்கிளில் செல்வதை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சுய விளம்பரத்தை தேடி வருகிறார். தொலைக்காட்சி, பத்திரிகை நாளிதழ்களில் அவரது படம் மட்டுமே வர வேண்டும் என நினைக்கிறார். மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியில் இருப்பதால் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். மு.க.ஸ்டாலின் கூறுவதையும், திமுக அமைச்சர்கள் கூறுவதையே வேதவாக்காக எண்ணி பணியாற்றி வருகின்றனர். இதையெல்லாம் அதிமுக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியே காலம் சென்றுவிடாது என்பதையும் காவல் துறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 3 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி கைவிட்டு போனது.

இந்த முறை அதிமுகவினர் முழு மூச்சாக தேர்தல் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுகவின் பொய்யான வாக்குறுதியை எடுத்துச்சொன்னாலே போதும் வெற்றி நமக்குத்தான்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x