Published : 09 Feb 2022 07:48 AM
Last Updated : 09 Feb 2022 07:48 AM

தங்களது மருத்துவக் கல்லூரி பாதிக்கும் என்பதால் நீட் தேர்வை திமுகவினர் எதிர்க்கிறார்கள்: குமரியில் அண்ணாமலை குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் பேசுகிறார் அண்ணாமலை. உடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா. படம்: என்.ராஜேஷ்

நாகர்கோவில்: திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால், நீட் தேர்வை அவர்கள் எதிர்க்கிறார்கள் என நாகர்கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகம்செய்து வைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகியும் மக்கள்நலத்திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை. ஸ்டாலின் பேசுவது ஒன்று,செய்வது ஒன்றாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். 10 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாக உள்ளது. இதனை மறைப்பதற்காக மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறார்கள்.

நீட் மசோதாவை 2-வது முறையாக ஆளுநருக்கு அனுப்ப சட்டப்பேரவை கூடியுள்ளது. நீட் தேர்வால் திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கப்பட்டதால் எதிர்க்கிறார்கள். நீட் தேர்வு மூலமே ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சென்னையில் முஸ்லிம்களும், குமரியில் கிறிஸ்தவர்களும் எங்கள்கட்சி வேட்பாளர்களாக இருக்கிறார்கள். தேசியத்தையும், ஆன்மிகத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் பாஜகவில் இணைகிறார்கள். திமுகவின் ஆணவத்தை தடுத்து நிறுத்தும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பாஜகவின் பலத்தை காட்டவேண்டும். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற்று தமிழக சரித்திரத்தை மாற்ற வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x