Published : 26 Apr 2016 03:13 PM
Last Updated : 26 Apr 2016 03:13 PM

பெரம்பலூர் தொகுதியில் முடங்கியுள்ள திட்டங்களை செயல்படுத்துவேன்: சிவகாமி உறுதி

பெரம்பலூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த, திமுக கூட்டணி வேட்பாளரும், சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவருமான ப.சிவகாமி, முடங்கியுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரா.பேபியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிவகாமி கூறும்போது, “திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், இத்தொகுதியில் ஆ.ராசா செயல்படுத்திய திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பேன். நான் இதே ஊரில் பிறந்து, வளர்ந்தபோதும், ஐஏஎஸ் பணி காரணமாக வெளியூரில் வசித்தேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரம்பலூரிலேயே தங்கி, மக்களுக்கு தொண்டு செய்வேன். தொகுதியில் முடங்கிக் கிடக்கும் பல்வேறு நலத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவேன். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளேன்” என்றார்.

திமுக வேட்பாளராக, அக்கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவதாக அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அசையும் மற்றும் அசையா சொத்துகளாக ப.சிவகாமி பெயரில் ரூ.4.31 கோடி, அவரது கணவர் ஆனந்தசந்திரபோஸ் பெயரில் ரூ.1.22 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x