Published : 07 Feb 2022 09:27 AM
Last Updated : 07 Feb 2022 09:27 AM

வேலூர் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனையில் பாரபட்சம் காட்டுவதாக தேர்தல் பார்வையாளரிடம் அதிமுகவினர் மனு: வெற்றியை தட்டிப்பறிக்க திமுகவினர் சதி என குற்றச்சாட்டு

வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாபிடம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையிலான அதிமுகவினர் நேற்று புகார் மனு அளித்தனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், திமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் அதிமுகவினர் நேற்று மனு அளித்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 4-ம் தேதி யுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, 5-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், மனுக்களில் உரிய தகவல்களை சரியாக பூர்த்தி செய்யாத மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். குறிப்பாக, வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 24 மற்றும் 25-வது வார்டு வேட்பா ளரின் மனுக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறி விக்கப்பட்டு, பிறகு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. இதற்கான காரணங்களை அதிமுகவினர் கேட்டபோது, அதற்கான பதிலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவிக்க வில்லை. இதனைக் கண்டித்து, அதிமுகவினர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் 6 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்வதில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாக கூறி அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அதிமுகவினர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாபிடம் நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், அதிமுகவின் வெற்றியை கண்டு திமுகவினர் அஞ்சுகின்றனர். எனவே, அதிமுக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் செயலில் சதித்திட்டத்தை திமுக தீட்டி வருகிறது. அதற்கு, அதிகாரிகள் துணைபோகின்றனர். வேலூர் மாநகராட்சியில் 6 வார்டுகளில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறி வித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24, 25 வார்டுகளில் போட்டியிட இருந்த அதிமுக வேட்பாளர்கள் வினோத்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் மனுக்கள் முதலில் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டதாக அறிவித்தது ஏன்? என்ற கேள்விக்கு தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

எனவே, வேட்புமனு பரிசீலனையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டி ருந்தனர்.

மனுவை பெற்ற மாவட்ட தேர்தல் பார்வையாளர், ‘‘இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அந்த விளக்கம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

அப்போது, அதிமுக வழக் கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், மாவட்டப் பொரு ளாளர் எம்.மூர்த்தி, நிர்வாகிகள் அண்ணாமலை, நாகு, ரகு, சிவாஜி, தாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x