Published : 04 Feb 2022 03:05 PM
Last Updated : 04 Feb 2022 03:05 PM

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி; தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு வாபஸ்

சென்னை: 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடியைs சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு பொது நலனுக்கு முரணாக அறிவிக்கப்படுள்ளது.பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021-22ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளது.

நகைக் கடனுக்கான வட்டி மற்றும் அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிவருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்தத் தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்ப நடைமுறையை சிதைக்கும் வகையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய நகைக்கடன் தள்ளுபடிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. எனவே தமிழக அரசின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கை வாபஸ் பெறுவதாக கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x