Last Updated : 01 Feb, 2022 05:16 PM

 

Published : 01 Feb 2022 05:16 PM
Last Updated : 01 Feb 2022 05:16 PM

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் | யாரைக் காப்பாற்ற முயல்கிறார் முதல்வர் ஸ்டாலின்? - விஜயசாந்தி கேள்வி

அரியலூர்: ”தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்?” என முன்னாள் எம்பியும், பாஜக விசாரணைக் குழு உறுப்பினருமான விஜயசாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி. தஞ்சை மைக்கேல் பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்துக் வந்த நிலையில், அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலைக்கு விடுதியின் காப்பாளர் சகாயமேரி காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சகாயமேரி கைது செய்யப்பட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, தான் படித்த பள்ளியில் மதம் மாறச் சொன்னார்கள் என்ற மாணவியின் வீடியோவை அடுத்து, பாஜக, இந்து முன்னணி, விஎச்பி அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மாணவியின் தற்கொலை விவகாரத்தில், நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அமைத்தார்.

இந்தக் குழுவில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்தியா ரே, தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தன் உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்துக்கு இன்று (பிப்.1) வந்தனர். அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாஐக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

விசாரணைக்கு பிறகுப் செய்தியாளர்களை சந்தித்த குழு உறுப்பினரான முன்னாள் எம்பி விஜயசாந்தி கூறியது: "மாணவியை மதம் மாற வலியுறுத்திய நிலையில், அதற்கு சம்மதிக்காததால், தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய விடுதி காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. பெயர்பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைப்படுத்தியுள்ளனர். பாஜகவின் போராட்டத்தால்தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதம் மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வென்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் உள்ளார். இந்தச் சம்பவத்தை ஆளும் திமுக அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது. மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் அராஜகம் செய்வதாகவும், இப்படிதான் சொல்ல வேண்டும் என போலீஸார் கட்டாயப்படுத்துவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

கட்டாயபடுத்தி மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இறந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை இப்பிரச்சினையை பாஜக விடாது. மதமாற்ற நடவடிக்கை முயற்சிக்கு இத்துடன் முடிவுகட்ட வேண்டும்" என விஜயசாந்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x