Published : 31 Jan 2022 05:52 PM
Last Updated : 31 Jan 2022 05:52 PM

பெத்தேல் நகரில் மின் இணைப்பை துண்டிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: மாணவர்கள் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு காரணமாக பெத்தேல் நகர் பகுதி குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கு கல்வியாண்டு முடியும் வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா காலக்கட்டம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென என அரசுத்தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி பெத்தேல் நகர் பொது மக்கள் தரப்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுவரை 153 கடைகளில் 107 கடைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும், அனைத்து வணிக நிறுவனங்களின் இணைப்பு இன்று மாலை 5 மணிக்குள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வீட்டுக்கான இணைப்பு வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்களின் இணைப்பை துண்டிப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார். வீட்டு இணைப்புகளை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதே விதிமீறல் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பெத்தேல் நகர் பொதுமக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெத்தேல் நகரில் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியை மேம்படுத்த 100 கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், 25 ஆண்டுகளுக்கும் மேல் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்கு பதிலாக, அரசு மாற்று இடம் வழங்கி உள்ளதாகவும், பெத்தேல் நகர் பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, குடியிருப்பு நிலமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வணிக நிறுவனங்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் படிப்பு, தேர்வுகளை கருத்தில் கொண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கல்வியாண்டு முடியும் வரை அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

அதேசமயம், வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்த நீதிபதிகள், அரசு கொள்கை அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள உண்மை ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞருக்கு ஏழு நாட்களில் வழங்க வேண்டும் என பெத்தேல் நகர் மக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு நிலங்களை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x