Published : 31 Jan 2022 03:50 PM
Last Updated : 31 Jan 2022 03:50 PM

2024 தேர்தலில் கூட்டணி தொடரும்: அதிமுக - பாஜக உறவு எத்தகையது?- அண்ணாமலை அடுக்கிய 10 கருத்துகள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும், இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், '2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்' என்ற அவர், அதிமுக - பாஜக உறவு குறித்தும் விவரித்துள்ளார். அதிமுக - பாஜக உறவு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதன் 10 முக்கிய அம்சங்கள்:

> தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைவர்கள் தொடர்ந்து உந்து சக்தியாக இருந்து வந்துள்ளனர். சட்டப்பிரிவு 360, விவசாய சட்டங்கள் உள்ளிட்ட நம் நாட்டில் பிரதமர் கொண்டு வந்த அனைத்து முக்கிய முடிவுகளுக்கும் அவர்களும், அதிமுக தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தனர்.

> 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது முழு ஒத்துழைப்பைக் கொடுத்து, ஈபிஎஸ் மீண்டும் முதல்வராக உழைத்தோம்.

> அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஜக தொண்டர்கள் நிற்க வேண்டும், தலைவர்கள் நிற்க வேண்டும், கட்சியினர் நிற்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கின்ற அதிமுகவுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

> அதிமுகவின் முக்கியமான தலைவர்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் அதிகமாக கேட்டிருந்தோம். எங்கள் தரப்பு பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், அதிமுக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை; அவர்களால் கொடுக்க முடியாத சூழலும் இருந்தது.

> இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்பு, முக்கிய முடிவு எடுத்துள்ளோம். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை அனைத்து இடத்திலும் நிறுத்தப் போகிறோம்.

> அதிமுகவின் முக்கியத் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் பேசியபடி, நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்திருக்கும். அகில இந்திய அளவில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்திருக்கும்; முக்கியமான விஷயங்களில் நம் நிலைப்பாடு ஒன்றாக இருக்கும்.

> நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுடன் கூட்டணி இல்லை என்பது கடினமான முடிவென்று சொல்ல மாட்டோம். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு. இந்த முடிவை டெல்லியில் உள்ள பாஜக தலைமை ஏற்றுக்கொண்டு முழு மனதோடு எங்களுக்கு இந்த சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

> வரும் நாட்களில் பாஜக - அதிமுக நல்லுறவு தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி அகில இந்திய அளவில் தொடரும். 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் நம்முடைய கூட்டணி தொடரும் அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

> அதிமுக குறித்து நயினார் நகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார்.

> அதிமுக தலைவர்கள் மீது எந்தவொரு சிறு வருத்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நாங்கள் விரும்பக்கூடிய தலைவர்கள், மிக திறமையாக கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்கள். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடினமான சூழலில் கூட திறமையாக கட்சியை வழிநடத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x