Last Updated : 31 Jan, 2022 12:59 PM

 

Published : 31 Jan 2022 12:59 PM
Last Updated : 31 Jan 2022 12:59 PM

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அந்த மாணவி, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக பேசிய வீடியோ சமூகவலை தளங்களில் வெளியானது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்தும் மாணவியின் உடலை வாங்க மறுத்து மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவியின் பெற்றோரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். பின்னர், மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவியின் உடலை பெற்று தகனம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி முருகானந்தம் அவரது மகளின் உடலைப் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று தகனம் செய்தார். மேலும் முருகானந்தம் அவரது மனைவி ஆகியோரிடம் தஞ்சாவூர் 3வது நீதித்துறை நடுவர் பெற்ற ரகசிய வாக்குமூலத்தின் நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது.

பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ பதிவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த வீடியோவில் பதிவில் உள்ளது மாணவியின் உண்மையான குரல் தானா, வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியதுள்ளது. இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும். அதனை சென்னையிலுள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு டிஎஸ்பி அனுப்பி வைக்க வேண்டும். தடயவியல் மைய இயக்குனர் செல்போனை ஆய்வு செய்து உண்மைத் தன்மை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். மாணவின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் ஆய்வு மைய அலுவலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி வாதிடுகையில், "விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும்" என்றார். அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகிறது. அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.மாணவியின் வீடியோ ஜன. 17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜன. 20 வரை மதமாற்றம் தொடர்பான சர்ச்சை எழுவில்லை. மாணவி உயிரிழக்கும் வரை காத்திருந்து அந்த வீடியோவை சமூகவலை தளங்களில் பரப்பியுள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். டிஎஸ்பி நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறார்" என்றார்.

மாணவி படித்த பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் வாதிடுகையில், "எங்கள் பள்ளி 160 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்துக்கள், இஸ்லாமிய மாணவர்கள் அதிகளவு பயில்கின்றனர். எங்கள் பள்ளியில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. தற்கொலை செய்து கொண்ட மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். அவர் தற்கொலையால் வருந்துகிறோம். அவரது தற்கொலை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணைக்கும் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது" என்றார்.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x