

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "தனியார் மயமாக்கினால் மின்கட்டணம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும்" என்று கூறியுள்ளார். மேலும், இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருள் வாங்கியதை மூடி மறைக்கின்ற வேலையை மோடி அரசு பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. 2017-ல் இந்திய நாட்டின் முதல் பிரதமராக நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது இஸ்ரேல் நாட்டில் இருந்து இரண்டு மில்லியன் டாலருக்கு ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தித்திலேயே இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ என்ற உளவு நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் என்ற மென்பொருளையும் இந்தியா பெற்றது. அதற்கு ரூ.300 கோடி இந்திய அரசு அந்த நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. இதுவும் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது என்று அமெரிக்க பத்திரிகையில் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து மிக தெள்ளத் தெளிவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றபோது, இந்த பெகாசஸ் மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது தேச துரோகம், மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை கூறியுள்ளனர். ஆகவே, இது சம்பந்தமான விசாரணையில் உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இஸ்ரேலிடம் மென்பொருள் வாங்கியதற்கு கையெழுத்திட்டதற்கான ஒப்பந்தம் மத்திய அரசிடம் இருக்கிறது. அதை மூடி மறைக்கின்ற வேலையை இப்போது நரேந்திர மோடி அரசு பார்த்துக்கொண்டிக்கிறது.
ஆகவே, விசாரணை எந்தவித பாரபட்சமும் இன்றி நடப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வெளிப்படையான விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும். பிரதமர் தன்னையும் அந்த விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கரோனா மற்றும் ஒமைக்கரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றை குறைவாக காட்டுவதற்கு, உமிழ்நீர் பரிசோதனை குறைத்து ஒரு நாடகத்தை புதுச்சேரி அரசும், மருத்துவத் துறையும் நடத்துகிறது. இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணத்தை மருத்துவத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்வதில்லை. இதனை அரசும் கண்டுகொள்வதில்லை. உயிரை துச்சமென நினைத்து செயல்படுகின்றனர். புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்குகின்ற வேலையை முதல்வர் ரங்கசாமியின் அரசு செய்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான காரணம் என்ன? மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. பொதுமக்கள் வரிப்பணம் வீணாகவில்லை. தனியார் மயமாக்கினால் மின்கட்டணம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். நமது மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகளை தனியாரிடம் மத்திய அரசு தாரைவார்த்துக் கொடுக்க தயாராகிவிட்டது. இதை முழுமையாக காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கிறோம். இது சம்மந்தமாக மதசார்பற்ற அணிகளோடு இணைந்து எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
ரங்கசாமி மின்துறை தனியார் மயமாக்கலை எங்கள் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். புதுச்சேரி அரசு ரூ.4 கோடி செலவில் புதிதாக 11 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி ஊதாரித்தனம் செய்து மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இதனை பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.